Monday, November 14, 2011


ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சி லிங் சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை : பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. முதுகலை ஆசிரியர்: மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், 2,612 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,305 பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்களில், உரிய கல்வித் தகுதி மற்றும் பணி மூப்பு உள்ளவர்கள், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான கவுன்சிலிங், 18ம் தேதி, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர்: ஆசிரியர் பயிற்றுனர்களாக இருப்பவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக (இரண்டும் ஒரே தகுதி கொண்ட பணியிடங்கள்) மாறுவதற்கான கவுன்சிலிங் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் ஆகியவை, முறையே 19, 20 ஆகிய தேதிகளில், சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
மிகவும் காலதாமதம்: வழக்கமாக, கல்வியாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர் பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும். கற்பித்தலில் பாதிப்போ, தொய்வோ ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜூன் அல்லது ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும். ஆனால், சமச்சீர் கல்வி பிரச்னையால், பள்ளி திறப்பது தள்ளி வைக்கப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் வினியோகம் உள்ளிட்ட தொடர்ச்சியான பணிகள் இருந்ததாலும், நான்கு மாதங்களுக்குப் பின் இப்போது நடக்கிறது.

No comments:

Post a Comment